தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று மீண்டும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்.
இதற்கிடையே தான் அனித ராதாகிருஷ்ணன் மீது சொத்து குவிப்பு புகார் எழுந்தது. அதாவது அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
இந்த வேளையில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தனது வருமானத்தை மீறி 4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக கூறப்பட்டது. இதையடுத்து 2006ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 10ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வழக்கை விசாரித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுப்பில் இருந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை அவர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி இன்று மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.